பெற்றோரின் அலட்சியத்தால் தெருநாய் கடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்ற போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. சிறு காயம் ஏற்பட்டதும், சிறுகாயத்திற்கு மருந்து தேவையில்லை என நினைத்து அலட்சியமாக பெற்றோர் இருந்துள்ளனர்.
இதையடுத்து நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால் பாஹ் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்த மருத்துவர்கள் ஆக்ராவின் எஸ்என் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை, “என் குழந்தைக்கு நாய் கடித்ததில் சிறு காயம் ஏற்பட்டது. சில நாட்களில் சரியாகிவிடும் என நினைத்தேன். இதேபோன்ற ஒரு சம்பவம் எனது அருகில் உள்ள மற்றொரு குழந்தைக்கு நடந்தது, சிறுவன் நன்றாக இருக்கிறான். ஆனால் எனது குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவளுக்கு அதிக காய்ச்சலால் பேச முடியவில்லை” என கண்ணீர் மல்கக் கூறினார்.
மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து “தெரு நாய்களால் காயம் ஏற்பட்ட குழந்தை 15 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாயால் தாக்கப்பட்ட உடனேயே குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போடப்படவில்லை. நாய், பூனை மற்றும் குரங்கு கடித்தால், உடனடியாக ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.” என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்துவரும் தெருநாய்க்கடி உயிரிழப்புகளை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.