கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் தற்போது சேலத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச் செயலாளர் சி. டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் இருவரும் தலைமறைவானதாக தகவல் வெளியானது.. இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை இரவுக்குள் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தற்போது சேலத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நேற்றிரவு வரை திருச்சியில் இருந்ததாகவும், பின்னர் இன்று திருச்சியில் இருந்து இன்று காலை சாலை மார்க்கம் சேலம் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. தனது செல்போனை நம்பிக்கைக்குரியவரிடம் கொடுத்துவிட்டு, சேலம் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.. செல்போன் சிக்னல் மூலம் போலீஸை குழப்புவதற்காக சினிமா பாணி டெக்னிக்கை அவர் கையாண்டதாக கூறப்படுகிறது.



