தற்போதைய நவீன சமையலறைகளில் நான் ஸ்டிக் மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு மத்தியில், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைச் சமையல் இன்று ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளமாக திரும்பி வந்துள்ளது. உணவில் உள்ள சத்துக்கள் சிறிதும் குறையாமல், அதன் இயற்கையான சுவை மற்றும் மணத்தை தக்கவைத்துக் கொள்ளும் அற்புத திறமை மண் பானைகளுக்கு உண்டு.
இந்தப் பாரம்பரிய முறைக்கு நீங்கள் புதியவர் என்றால், உலோகப் பாத்திரங்களை கையாள்வதில் இருந்து மண் பானைகளை பராமரிப்பதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சிறிய தவறுகள் கூடப் பானையை சேதப்படுத்துவதுடன், சமைக்கும் உணவின் தரத்தையும் பாதிக்கக்கூடும்.
மண் பானைகளைப் பயன்படுத்துவதில் நாம் செய்யும் முதல் தவறு, புதிதாக வாங்கிய பானையை அப்படியே அடுப்பில் வைப்பதுதான். ஆனால், கடைகளில் இருந்து வாங்கிய பானையை முதலில் குறைந்தது 24 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் முழுமையாக மூழ்க வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், பானையின் நுண்துளைகளில் உள்ள தூசுகள் நீக்கப்பட்டு, களிமண் வலுப்பெறுகிறது. இந்த செயல்முறை, பானை திடீரென சூடாகும் போது ஏற்படும் விரிசல்களில் இருந்து அதை பாதுகாக்கும்.
மண் பானைகளின் இயல்பே, மெதுவாக சூடாகி, வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்வதுதான். எனவே, சமைக்கும்போது அடுப்பை ஒருபோதும் அதிக வெப்பத்தில் வைக்கக் கூடாது. மிதமான அல்லது குறைந்த வெப்பத்திலேயே சமைப்பது சிறந்தது. ஏனென்றால், திடீர் அதிக வெப்பம் பானையில் விரிசல்களை உண்டாக்கும். மேலும், சூடாக இருக்கும் பானையை இறக்கிய பின், தரையிலோ அல்லது ஈரமான பரப்பிலோ வைக்காமல், உலர்ந்த, வெப்பம் தாங்கும் இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.
மண் பானைகளை பராமரிப்பதில் உள்ள முக்கியமான விதி, சோப்பு அல்லது டிஷ்வாஷ் திரவங்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான். மண் பானைகளில் நுண்துளைகள் இருப்பதால், நீங்கள் பயன்படுத்தும் ரசாயனங்களை அந்த துளைகள் உறிஞ்சிக் கொள்ளும். பின்னர், சமைக்கும்போது இந்த ரசாயனங்கள் உணவில் கலந்து, அதன் தரத்தை கெடுத்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, பானையை சுத்தம் செய்ய, தேங்காய் நார், உப்பு, சமையல் சோடா அல்லது எலுமிச்சை தோல் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.
அதேபோல், மண் பானைகளை கழுவிய பிறகு, அதை நன்றாக காற்றில் உலர விடுவது மிக முக்கியம். பானையின் உள்ளே சிறிதளவு ஈரம் இருந்தாலும், அது பூஞ்சை அல்லது பூசணம் பிடிக்க வழிவகுக்கும். எனவே, பானை முழுமையாக காய்ந்த பின்னரே எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது, மண் பானைகளை சில மணி நேரம் வெயிலில் காய வைப்பது அதன் சுகாதாரத்தை பேணுவதுடன், நீண்ட காலம் உழைக்கவும் உதவுகிறது.
Read More : 64 சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதி அடைந்த சித்தர்காடு..!! தமிழ்நாட்டில் இப்படி ஒரு சக்திவாய்ந்த கோயிலா..?



