பேருந்து நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் அவசர தேவைகளுக்காக பலரால் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கழிப்பறைகள் ஓரிரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமாகத் தெரிந்தாலும், அங்கே கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, அதிக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை பரப்புகிறார்கள். இதனால், இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வயிற்று வலியை உண்டாக்கும் ஒட்டுண்ணிகள், தோல் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் போன்ற பல நுண்கிருமிகள் கழிப்பறையின் பரப்பில் படிந்து தேங்குகின்றன.
கழிப்பறை இருக்கை மட்டுமல்லாமல், ஃப்ளஷ் லீவர்கள், குழாய் மூடிகள், கதவு கைப்பிடிகள் போன்ற இடங்களில்தான் இந்த பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இவற்றை தொடும்போது பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்காத்துக் கொள்வது எப்படி..?
பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது மக்கள் அதிக எச்சரிக்கையுடனும் சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். நோய்த்தொற்று வராமல் தற்காத்துக் கொள்ள கழிவறையைப் பயன்படுத்திய பிறகு சோப்பு அல்லது சானிடைசர்கள் மூலம் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
கைகளை உலர்த்துவதற்கு மின்சார கை உலர்த்திகளைத் தவிர்த்து, டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்தலாம். மிக முக்கியமாக, கிருமிகள் நிறைந்த பொதுக் கழிப்பறைக்குள் செல்போனைப் பயன்படுத்தாமல் இருப்பது பல உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க உதவும்.
Read More : உடல் எடை குறைப்புக்கு மருந்து, மாத்திரைகள்..!! நம்பாதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!



