காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 22 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma), காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வருகிறது. 22 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலக் காவல்துறையின் தனிப்படை உடனடியாக வழக்குப் பதிவு செய்தது. ‘கொலையில்லாத மரணத்தை விளைவித்தல்’ மற்றும் ‘கலப்பட மருந்து தயாரித்தல்’ ஆகிய இரண்டு முக்கிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச காவல் துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையிலான தனிப்படை, மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான 75 வயது ரங்கநாதனை சென்னையில் வைத்து கைது செய்தது. சென்னை கோடம்பாக்கம், நாகார்ஜூனா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. .
இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் சுங்குவார்சத்திரம் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. மருந்து தயாரிக்க ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது, அந்நிறுவனம் மூடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலைகள் மற்றும் மருந்து நிறுவனங்களில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..
Read More : Flash : நடப்பு ஆண்டிலேயே 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு!



