உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை விடுவிப்பதாகும். உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், உலக உணவு தினம் என்பது அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
வரலாறு: ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 1945 இல் நிறுவப்பட்டது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, 1979 இல், FAO மாநாட்டில், உலக உணவு தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.
முக்கியத்துவம்: உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும்.
இந்த ஆண்டு உலக உணவு தினத்தின் கருப்பொருள் “சிறந்த உணவுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் கை கொடுப்போம்” என்பது ஆகும். இந்தத் தலைப்பு, ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறது. அரசுகள், விவசாயிகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நிலைத்துணவுத் துறைகளை உருவாக்க அனைவரும் சேர்ந்து முயற்சிக்க அழைக்கிறது. “கை கொடுப்போம்” என்ற கருத்து, 2025ல் தனது 80-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் FAO (உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம்)வின் முக்கியக் கருத்தாகவும் விளங்குகிறது.
பருவநிலை மாற்றத்தில் உணவுப் பாதுகாப்பு எப்படி? தற்போது உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் 2050 ஆம் ஆண்டில் 9.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய, உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம், ஆனால் மறுபுறம், பருவநிலை மாற்றத்தாலும், மாறிவரும் காலநிலை காரணமாகவும், அதிக வெப்பநிலை காரணமாகவும் விவசாயம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
அத்துடன் வெள்ளம், ஆலங்கட்டி மழை போன்ற வானிலை தொடர்பான பேரழிவுகள் உருவாகின்றன. எனவே, இன்றைய காலகட்டத்தில் நிலையான விவசாயத்துடன் ஆரோக்கியமான உணவும் அனைவருக்கும் கிடைக்க நிரந்தர வழியைக் கண்டறிய வேண்டியது அவசியம். இதற்கு, குறைந்த இடத்திலிருந்து அதிக உற்பத்தி செய்து, சிறந்த அறுவடை, சேமிப்பு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் மூலம் உணவு தானியங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும்.
இதற்காக விவசாயிகளுக்கு மலிவு விலையில் சேமிப்பு தொட்டிகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும், இன்றும் பல லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகி வருகிறது. இந்தியாவில் திருமணம் போன்ற விழாக்களில் உணவுப் பொருள்கள் பெருமளவில் விரயம் ஆவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற உணவுகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் பசி என்ற உலகளாவிய பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உற்பத்தி அதிகரிக்கும் போது, அது தொடர்பான மற்ற அம்சங்களும் சமமாக கண்காணிக்கப்பட வேண்டும்.



