திருச்சியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் 2011-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக, அந்த இளம்பெண் கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து, தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ராஜாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த ராஜா, திருமணம் செய்ய வேண்டுமென்றால், கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறி, அதற்கான மாத்திரையையும் கொடுத்துள்ளார்.
ராஜாவின் பேச்சை நம்பி, அந்தப் பெண் மாத்திரையைச் சாப்பிட்டுக் கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். இருப்பினும், வாக்குறுதி அளித்தபடி ராஜா அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், ராஜா, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் நாடகமாடி, கர்ப்பத்தைக் கலைக்கச் செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : நல்லகண்ணுவுக்கு என்ன ஆச்சு..? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!