டெல்லி உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) வழங்குவது தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் மற்றும் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள், தங்கள் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை இந்தத் தீர்ப்பு விளக்குவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு வழக்கறிஞருக்கும், இந்திய ரயில்வேயில் ‘குரூப்-ஏ’ அதிகாரியாகப் பணியாற்றும் பெண்ணுக்கும் இடையே 14 மாத காலத் திருமண உறவுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவு ஏற்பட்டது.
மனைவி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்தார். கணவரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட குடும்ப நீதிமன்றம், அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.
ஆனால், மனைவி கோரிய நிரந்தர ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்தப் பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, மனைவி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வதற்காக ரூ.50 லட்சம் கோரியிருந்த தகவல் தெரியவந்தது.
இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், “உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்புத் தொகையைக் கோர முடியும். இந்த வழக்கில் மேல்முறையீட்டாளர் நிதி ரீதியாக நிலையானவர் (இந்திய ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்). மேலும், இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
எனவே, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி, மனைவியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு, சுயவருமானம் ஈட்டும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கோரும் சட்ட விதிகளில் ஒரு தெளிவான வரையறையை அளித்துள்ளது.



