கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகே ஆனேக்கல் தாலுகா, ஜிகினி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்த இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) என்ற இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, பழக்கம் ஏற்பட்டு, தங்களது உறவினர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் சமீபத்தில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இந்த வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி இரவு ராகேஷ் மற்றும் சீமா இருவரும் தங்கள் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அடுத்த நாள் காலை, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, அக்கம் பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
உடனடியாக ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள ஜிகினி போலீசார், தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், இவர்கள் இருவருக்கும் இடையேயான சண்டைகள், நிதி நெருக்கடி அல்லது மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Read More : நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?



