மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றோடு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல முக்கிய சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாம்பு, பூச்சிகள் வெளியே வரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது உண்டு. ஆனால், தற்போது முதலை ஒன்று சாலையில் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூர் – நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. பரபரப்புமிக்க இந்த சாலையில் முதலை அசால்டாக நடந்து செல்வதும், அதனை காரில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். மேலும், அந்த முதலையை கவனிக்காமல் உணவு டெலிவரி ஊழியர் கிராஸ் செய்கிறார். அதிர்ஷடவசத்தால் அந்த ஊழியர் உயிர் தப்பியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.