கர்நாடக மாநிலம் பெங்களூருவின் திலக் நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சல்மா. சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு இவரது கணவர் காலமானார். இதனால், சல்மா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இச்சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் சல்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பண உதவி செய்து நெருங்கிப் பழகிய சுப்பிரமணியுடன், சல்மாவுக்கு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பழகி வந்தனர்.
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுப்பிரமணி தனிமையில் சந்திக்க அழைத்ததால், சல்மா அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். வீட்டின் அருகில் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அருகில் இருந்த கட்டையால் சல்மாவைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சல்மா உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி, சடலத்தைப் போர்வையில் சுற்றி, அருகிலிருந்த ஒரு ஆட்டோவில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை ஆட்டோவை எடுக்க வந்த ஓட்டுநர், போர்வையில் இருந்த சல்மாவின் உடலைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சல்மாவின் கொலைக்குக் காரணமான சுப்பிரமணியைத் தேடி தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் 4 குழந்தைகளின் தாய் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், திலக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



