நாள்தோறும் நாம் உண்ணும் உணவு மற்றும் குடிநீர் வழியாக, எண்ணிலடங்காத மிக நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastic) துகள்கள் மனித உடலுக்குள் நுழைவது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உடலில் தினசரி லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு :
உடலுக்குள் நுழையும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் செரிக்கப்படாமல் திசுக்களில் சேர்வதால், மனிதர்களுக்குப் பலவிதமான கடுமையான நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது. குறிப்பாக, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுவதற்கு இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கர்ப்பிணிகள் ஏன் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்..?
இந்த ஆபத்துகளில், கர்ப்பிணிகளுக்கும், பச்சிளங் குழந்தைகளுக்கும் உள்ள அச்சுறுத்தல் மிக முக்கியமானது. கர்ப்பிணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாத்திரங்களில் உள்ள உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது, இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தாயின் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
அங்கிருந்து, இந்தத் துகள்கள் தாய்ப்பால் வழியாக எளிதில் குழந்தையின் உடலுக்குள் செல்கின்றன. ஒரு குழந்தையின் ஆரம்ப கால உடல் வளர்ச்சிக் கட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் நுழைவது, அவர்களின் உடல்நலன் மற்றும் உறுப்புகளின் வளர்ச்சியில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே வருங்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக கர்ப்பிணிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் கொள்கலன்களில் வெந்நீர் அல்லது சூடான உணவுகளை இடுவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.



