தமிழ்நாடு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ‘எல்காட்’ (ELCOT) நிறுவனம் வெளியிட்ட டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த லேப்டாப்களைத் தயாரிக்கும் பணி, டெல் (Dell), எச்பி (HP), ஏசர் (Acer) ஆகிய மூன்று உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப லேப்டாப்களைத் தயாரித்து மாநில அரசிடம் ஒப்படைத்த பின், அவை தகுதியுள்ள மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
கல்வித் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் செயல்திறன் கொண்டதாக இந்த லேப்டாப்கள் வடிவமைக்கப்படுகின்றன. டெண்டர் ஆவணங்களின்படி, இலவசமாக வழங்கப்படும் இந்தக் கணினிகள் 14 அல்லது 15.6 அங்குல டிஸ்ப்ளேவுடன், 8 ஜிபி ரேம், 256 ஜிபி சாலிட் ஸ்டேட் டிரைவ் (SSD), மற்றும் 128 எம்பி VRAM அல்லது அதற்கு மேற்பட்ட ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் வசதியுடன் இருக்கும்.
மேலும், குறைந்தது நான்கு கோர்கள் கொண்ட Intel i3 அல்லது AMD Ryzen 3 புராசஸர் (அல்லது அதற்கு மேம்பட்டது) இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டம் தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் டிஜிட்டல் சூழலை வலுப்படுத்தி, மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ், 38 மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 4,600 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள். இதில், அதிகபட்சமாக 366 கல்லூரிகளைக் கொண்டுள்ள கோவை மாவட்டம் வழியாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தமிழகத்தின் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கல்வியில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பே மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி முடிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்காக, மார்ச் மாதத்திற்குள் விநியோகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேப்டாப் விநியோகத்தின் சரியான தேதி மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்கான இறுதி நடைமுறைகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு திட்டத்தின் செயல்பாடு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : சிவபெருமானின் முழு அருளையும் பெற வேண்டுமா..? நவ.3ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க..!!



