ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினமானது, பல ஆன்மீக முக்கியத்துவங்களை கொண்டது. குறிப்பாக, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனித நாளாக இது கொண்டாடப்படுகிறது. அகிலத்தின் தந்தையாக விளங்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி முழுவதும் சமைத்த அன்னத்தால் முழுவதுமாக மூடப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது இந்த நாளின் தனிச்சிறப்பு.
இந்த அன்னாபிஷேக தரிசனம் காண்பதால், ஒரே நேரத்தில் கோடி லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த அன்னம், பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும், இந்த பௌர்ணமி நாளில்தான் சந்திர பகவான் தனது சாபங்களில் இருந்து விடுபட்டு, முழு பிரகாசத்துடன் பூமிக்கு மிக அருகில் வந்து, அதிகபட்ச ஒளியைத் தருகிறார் என புராணங்கள் கூறுகின்றன. அறிவியல் ரீதியாகவும், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து மிகவும் பிரகாசமாகக் காட்சியளிப்பது இந்த நாளில் தான் எனக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஐப்பசி பௌர்ணமியானது, சிவனுக்கு மட்டுமல்லாமல் முருகப் பெருமானுக்கும் மிகவும் உகந்த நாளாகும்.
இந்த அற்புதமான நாளில், முருகப் பெருமானை மனதார வழிபட்டு, ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வேண்டிக் கொண்டால், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வறுமை நீக்கம், நோய் நிவாரணம், மன நிம்மதி, வாழ்வில் உயர் நிலை, செல்வச் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
குறிப்பாக, ஐப்பசி பௌர்ணமி நாளில் குளிகை நேரத்தில் ஒரு சிறப்பான வழிபாட்டைச் செய்தால், குடும்பத்திலும் வாழ்க்கையிலும் உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி, செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டிற்குத் தேவையான இரண்டு முக்கியமான பொருட்கள்: பனங்கற்கண்டு மற்றும் சுக்கு அல்லது வசம்பு ஆகும்.
“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற முதுமொழிக்கேற்ப, சுப்ரமணியக் கடவுளுக்கு சுக்கு படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் அளவில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பனங்கற்கண்டையும் சேர்த்துப் படைப்பது விசேஷ பலன்களை அளிக்கும்.
குளிகை நேரத்தின் சிறப்பு : ராகு காலம், எமகண்டம் போல் அல்லாமல், குளிகை நேரத்தில் தொடங்கும் எந்த ஒரு காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே, சுப காரியங்கள், கடனைத் திருப்பி அடைப்பது, நகை வாங்குவது போன்றவற்றை இந்த நேரத்தில் செய்வதற்குப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், முருகப் பெருமானின் அருள் மீண்டும் மீண்டும் கிடைத்து, நன்மைகளும் செல்வங்களும் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஐப்பசி பௌர்ணமி நாளில் குளிகை நேரத்தில் இந்தப் பிரத்யேக வழிபாட்டினைச் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
Read More : நில பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோயில்..! எங்க இருக்கு தெரியுமா..?



