திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான புவனேஸ்வரி, நத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த இவருக்கும், அதே வடமதுரையைச் சேர்ந்த 23 வயதான நந்தகுமார் என்பவருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. நந்தகுமார் வடமதுரையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
மருத்துவமனையில் பயிற்சி காலத்தில் இருந்த புவனேஸ்வரி, விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்றைய முன்தினம் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காதலன் நந்தகுமாரைச் சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார். பின்னர், இருவரும் காரில் பழனிக்குச் சென்று அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்குள் நர்சிங் கல்லூரி வகுப்பில் இருக்க வேண்டும் என்பதால், இருவரும் அவசரமாகக் கிளம்பி காரில் நத்தம் நோக்கி வந்துள்ளனர். காலை சுமார் 6.30 மணியளவில், பழனியை அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி மாட்டுப் பாதை பகுதியில் கார் வந்தபோது, சாலையின் வளைவை நந்தகுமார் கவனிக்காமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், புவனேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த காதலன் நந்தகுமார் அதிர்ஷ்டவசமாகச் சில காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சத்திரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து காதலர் நந்தகுமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 எப்போது..!! தேதியை அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்..!!



