சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை (ED) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது.
இந்த முடக்கப்பட்ட சொத்துகளில், ரெய்னா பெயரில் ரூ.6.64 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான நிலச் சொத்தும் அடங்கும்.
ED வெளியிட்ட அறிக்கையில், “இந்த நடவடிக்கை 1xBet மற்றும் அதன் துணை பிராண்டுகள் 1xBat மற்றும் 1xBat Sporting Lines உள்ளிட்ட சட்டவிரோத கடல் பந்தய தளங்கள் மீதான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகும். பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல FIR-களின் அடிப்படையில், இந்நிறுவனங்கள் இந்திய பயனர்களை குறிவைத்து அனுமதியின்றி ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட சேவைகளை நடத்தியது கண்டறியப்பட்டது,” என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் “ சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் இருவரும் 1xBet நிறுவனத்தின் துணை பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருந்தனர். அந்த விளம்பர ஒப்பந்தங்களுக்கான கட்டணங்கள், சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளிலிருந்து வந்த பணம் என்பதைக் மறைக்க பல அடுக்குகள் கொண்ட வெளிநாட்டு பரிவர்த்தனைகளின் மூலம் அனுப்பப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது..
விசாரணையின் போது, 1xBet நிறுவனம் இந்தியாவில் 6,000-க்கும் மேற்பட்ட போலி (mule) கணக்குகள் வழியாக விரிவான பந்தய வலையமைப்பை நடத்தியது தெரியவந்தது. பயனர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம், சரியான KYC சரிபார்ப்பில்லாமல் பல்வேறு கட்டண நுழைவாயில்கள் (payment gateways) மூலம் கடத்தப்பட்டு, அதன் உண்மையான மூலத்தை மறைத்ததாக ED கூறியுள்ளது.
மேலும், சில வணிகர்கள் தவறான காரணங்களின் அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தனர்; அவர்களின் வணிக செயல்பாடுகள் அவர்களின் பரிவர்த்தனை முறைகளுடன் பொருந்தாதவையாக இருந்தன எனவும் கூறப்பட்டுள்ளது.
4 கட்டண நுழைவாயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 60 வங்கி கணக்குகளில் ரூ.4 கோடியே அதிகமான தொகை முடக்கப்பட்டுள்ளதாக ED தெரிவித்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட மொத்த பணம்வெளிமாற்ற தடம் ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
“ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட திட்டங்களில் ஈடுபட வேண்டாம். தெரியாத நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம். இப்படிப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை நிற்பவர்கள், பணம்வெளிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு ஆளாகலாம்,” என்று ED அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சட்டவிரோத பந்தய தளங்கள் நிதி மோசடிகள் மட்டுமல்லாமல், பெரிய அளவில் பணம்வெளிமாற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கின்றன என்று ED தெரிவித்துள்ளது. 1xBet வலையமைப்பும் அதனுடன் தொடர்புடைய நபர்களும் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : Breaking : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு..!



