கோவை மாவட்டம் இருகூர் அருகே ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது. ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தாகவும் அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் i20 கார் ஒன்று வந்து, காரிலிருந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது..
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதைக் கண்டு காரின் அருகே செல்ல முயன்றபோது, அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.. மேலும், காருக்குள் இருந்த பெண் அலறிய குரல் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வெள்ளை நிற காரில் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர்கள் அழைத்துச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்ததாவது, “சூலூரிலிருந்து ஏஜி புதூர் நோக்கி சென்ற ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக 100க்கு அழைத்து தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை காணாமல் போன பெண் குறித்து புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை; அதனை கண்டறிந்தவுடன் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்த நிலையில் பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் நானும், என் கணவர் குழந்தையும் வெளியே சென்று வந்தோம்.. அப்போது எனக்கும் தனது கணவருக்கும் காரில் சண்டை ஏற்பட்டது.. இதனால் நான் காரில் இறங்கி விட்டேன்.. அவர் முதலில் வா பிரச்சனை செய்யாதே, வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.. பின்னர் என்னை அடித்து விட்டார்.. நானும் திருப்பி அவரை அடித்து விட்டேன்.. இது ஒரு சாதாரண பிரச்சனை தான்.. அதன்பின்னர் காரை ஏறிவிட்டேன்.. நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்..” என்று தெரிவித்தார்..



