திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில், 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி சமையல் உதவியாளர் லலிதாவுக்கு, திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி லலிதாவுக்கு மொத்தம் 54 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன..?
எரவாஞ்சேரி அருகே உள்ள தேதியூர் கிராமத்தைச் சேர்ந்த லலிதா (40), அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவனுடன் லலிதா நெருங்கிப் பழகியுள்ளார்.
கடந்த 2021, அக்டோபர் 26-ஆம் தேதி, லலிதா அந்தச் சிறுவனைக் கடத்திச் சென்று ஊட்டி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, பலமுறை கட்டாயப்படுத்திப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே, பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
பின்னர், அவர்கள் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த லலிதாவை நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்து, சிறுவனையும் மீட்டனர். இதுதொடர்பான வழக்கு திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில், சிறுவனின் சாட்சியம் மற்றும் மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் லலிதா குற்றவாளி என நிரூபணமானது.
இதையடுத்து, லலிதாவுக்குப் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 54 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



