1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்..
அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா அந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தால், அது தென் ஆசியாவின் பல பிரச்சனைகளுக்கு “ஒரு தீர்வாக இருந்திருக்கும்” என்றும் அவர் கூறினார்.
1980களில் பாகிஸ்தானின் ரகசிய அணு நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் சிஐஏயில் எதிர்-அணு பரவல் அதிகாரியாக (counterproliferation officer) பணியாற்றிய பார்லோ, இந்த ரகசியத் தாக்குதல் திட்டம் பற்றிய வதந்திகள் நுண்ணறிவு வட்டாரங்களில் இருந்ததாக உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் அதில் நேரடியாக ஈடுபடவில்லை, ஏனெனில் அந்த காலகட்டத்தில் அவர் அரசு சேவையிலிருந்து விலகியிருந்தார் என்றும் கூறினார்.
ஏ.என்.ஐ. (ANI)-க்கு அவர் அளித்த பேட்டியில்,“1982 முதல் 1985 வரை நான் அரசுப் பணியில் இல்லை. அந்தத் திட்டம் அந்தக் காலத்தில்தான் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை பற்றி ஒரு கட்டத்தில் கேட்டேன், ஆனால் அது நடக்காததால் அதில் நான் ஆழமாக ஈடுபடவில்லை,” என ரிச்சர்ட் பார்லோ தெரிவித்தார்.
அறிக்கைகள் மற்றும் இரகசிய ஆவணங்கள் வெளிவந்த தகவல்களின்படி, இஸ்ரேல் மற்றும் இந்தியா இணைந்து பாகிஸ்தானின் கஹூட்டா யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை (Kahuta Uranium Enrichment Plant) தாக்கும் முன்கூட்டிய வான்வழி தாக்குதலை (preemptive airstrike) திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையமே பாகிஸ்தானின் அணு திட்டத்தின் மையமாக இருந்தது. இத்தாக்குதலின் நோக்கம், இஸ்லாமாபாத் அணு ஆயுதங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை பரப்புவது (proliferation) — குறிப்பாக, இஸ்ரேலின் தீவிர எதிரியான ஈரானுக்கு — தடுக்கச் செய்வது என்பதாகும்.
இந்த கூட்டு நடவடிக்கை நடந்திருந்தால், அது தென் ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் பெரிய புவியியல் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பார்லோ பேசிய போது “ அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் தலைமையிலான நிர்வாகம், அத்தகைய தாக்குதலுக்கு (முக்கியமாக இஸ்ரேல் மூலம் நடந்திருந்தால்) கடுமையாக எதிர்த்திருக்கும். ஏனெனில் அது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடத்திய அமெரிக்காவின் இரகசிய போர்திட்டத்தை பாதித்திருக்கும்.
பாகிஸ்தான் இந்தச் சூழ்நிலையை தன் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனீர் அஹ்மத் கான் போன்ற அதிகாரிகள், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீபன் சோலார்ஸ் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். “அமெரிக்கா உதவித் தொகைகளை நிறுத்தினால், ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒத்துழைப்பு ஆபத்தில் சிக்கும்” என்று எச்சரித்தனர்..
“ரீகன், மேனஹெம் பெகின் (அப்போதைய இஸ்ரேல் பிரதமர்) இப்படி ஏதாவது செய்திருந்தால், அவரை கடுமையாகத் தண்டித்திருப்பார். ஏனெனில் அது ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் தலையிடும்.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், அந்தக் கால அரசியல் சமநிலைகள் மற்றும் அமெரிக்கா–பாகிஸ்தான்–இஸ்ரேல் உறவுகளில் இருந்த நுட்பமான அழுத்தங்களை அவர் வெளிப்படுத்தினார்.



