பொது இடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் காகிதத் தேநீர் கோப்பைகள் குறித்து மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.ஐ.டி. கரக்பூர் நடத்திய ஆய்வின் அடிப்படையில், சூடான தேநீரை பிளாஸ்டிக் கோப்பைகளில் அருந்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமும் 75,000 பிளாஸ்டிக் துகள்கள் :
ஐ.ஐ.டி. கரக்பூரின் ஆய்வின்படி, ஒரு சூடான தேநீர் காகிதக் கோப்பைகளில் சுமார் 15 நிமிடங்கள் இருக்கும்போது, அந்தக் கோப்பையின் உள் அடுக்கில் பூசப்பட்டிருக்கும் ஹைட்ரோபோபிக் படலம் உடைந்து, சுமார் 25,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை தேநீரில் கலக்கச் செய்கிறது.
இதன் தீவிரமான விளைவுகளை விளக்கிய சுகாதாரத் துறை, ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 முறை இது போன்ற கோப்பைகளில் தேநீர் குடிக்கும்போது, தினமும் சுமார் 75,000 பிளாஸ்டிக் துகள்கள் அவரது உடலுக்குள் நுழைவதாக எச்சரித்துள்ளது. இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள், காலப்போக்கில் உடலில் தங்கி, புற்றுநோய் போன்ற மிகவும் கடுமையான நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
சுகாதாரத்துறை வேண்டுகோள் :
சத்னா மாவட்டத்தின் மத்திய சுகாதாரத் துறை அலுவலகத்தின் (CMHO) டாக்டர் எல்.கே. திவாரி, இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, “தேநீர் கோப்பைகளின் உட்புறம் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் பூசப்பட்டிருக்கிறது. சூடான தேநீரை அதில் ஊற்றும்போது, பிளாஸ்டிக் வெப்பமடைந்து உருகி, நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது.
இவை எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு வித்திடுகின்றன” என்று நவ்பாரத் தெரிவித்தார். எனவே, இந்த விஷத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பிளாஸ்டிக் கோப்பைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும் அவர் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.



