செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியில், திருமணமான 4 மாதத்தில் மனைவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த இளம் தம்பதியின் வாழ்வில், மதுமிதாவின் செயல்பாடுகள் புயலை கிளப்பியுள்ளன. திருமணத்திற்குப் பிறகும் மதுமிதா, தனது ஆண் நண்பருடன் கைப்பேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதனை கணவர் சரண் பலமுறை கண்டித்தும், எச்சரித்தும் மதுமிதா தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சரண் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை, மனைவியின் நடவடிக்கை மீது கோபத்தில் இருந்த சரண், மதுமிதாவை மதுராந்தகம் அருகே உள்ள செனைனேரி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுமிதாவை கொலை செய்யும் திட்டத்துடன் சரண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மதுமிதாவின் கழுத்தை சரமாரியாக அறுத்துக் கொலை செய்துள்ளார். மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த பின், சரண் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்குச் சென்று, தன் தாயாரிடம் நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்.
மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மதுராந்தகம் போலீசார், மதுமிதாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சரணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரண் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



