உலகில் எத்தனையோ நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரமே மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய ஆப்பிள்’ என்று பொருள்படும் மான்சினெல்லா என்ற சொல்லிலிருந்து இதன் பெயர் வந்தது.
ஆப்பிள் போல இருக்கும் ஆபத்து :
கரீபியன் பகுதியை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் சுமார் 15 மீட்டர் (49 அடி) உயரம் வரை வளரும். பார்ப்பதற்கு, சிவப்பு-சாம்பல் பட்டை, சிறிய பூக்கள் மற்றும் பளபளப்பான பச்சை இலைகளுடன் காணப்படும் இதன் பழங்கள், ஆப்பிள் போன்ற தோற்றத்தில், பச்சை அல்லது பச்சை-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பழங்கள் மற்றும் இலைகளின் தோற்றம் காரணமாகவே இது ‘கடற்கரை ஆப்பிள்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது கரீபியன் தவிர, அமெரிக்காவின் புளோரிடா, மெக்சிகோ போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.
இந்த மரம் கடற்கரை அரிப்பைத் தடுப்பது, மணலை உறுதிப்படுத்துவது போன்ற இயற்கைப் பணிகளுக்கு உதவுகிறது. இருப்பினும், மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இது மிகுந்த ஆபத்தானது. மான்சினீல் மரத்தின் தண்டு, இலை, பூ, காய், பட்டை என எல்லா பகுதிகளிலும் வெள்ளை நிறப் பால் போன்ற சாறு உள்ளது. இந்த சாறு அதிக நச்சுத்தன்மையுடனும், அமிலத்தன்மையுடனும் காணப்படுகிறது.
இந்த சாறு மனிதர்களின் தோலில் பட்டால், உடனடியாகக் கொப்புளங்கள் ஏற்படும். மழை பெய்யும்போது, மரத்தில் இருந்து வடியும் நீர், இந்த அமில திரவத்துடன் கலந்து தோலின் மீது பட்டாலும் கொப்புளங்களை உண்டாக்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த மரத்தை எரித்து அழிக்க முயன்றால், அதிலிருந்து வரும் புகை கண்களை உடனடியாக குருடாக்கும் தன்மை கொண்டது.
இதன் பழத்தை சாப்பிட்டால், கடுமையான இரத்தப்போக்கு, இரைப்பை மற்றும் குடல் அழற்சி ஏற்பட்டு மரணம் வரை செல்லக்கூடும். சுவாசப் பாதைகளை உடனடியாக முடக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இவ்வளவு ஆபத்துகள் நிறைந்திருந்தாலும், இந்த மரத்தின் பழங்களை கருப்பு முள்ளந்தண்டு உடும்பு என்ற உயிரினம் மட்டும் உட்கொண்டு வாழ்கிறது.
மேலும், கரீபியன் தச்சுப் பணியாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், இந்த மரத்தின் அடிப்பகுதியில் நெருப்பு வைத்து, கீழே விழச் செய்து, நன்கு காய வைத்து, அதன் நச்சுத்தன்மைகளை நீக்கிய பிறகு, அதன் மரங்களைப் பயன்படுத்தி தளவாட பொருட்கள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
Read More : விவசாய கழிவுகள், கல்லில் இருந்து காகிதத்தை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்..!! ஸ்பெஷல் என்ன தெரியுமா..?



