சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கிக் கடன் மூலம் இந்தக் கனவை நிறைவேற்றுவது எளிதல்ல. இந்த சிரமத்தை குறைக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அர்பன் (PMAY-U) 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், நகர்ப்புறத்தில் வீடு வாங்கத் திட்டமிடும் மக்களுக்குப் பெரிய பொருளாதார உதவியாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது யாருக்கான திட்டம்..?
2024இல் ஆட்சிக்கு வந்த பிறகு நரேந்திர மோடி அரசு ஒப்புதல் அளித்த இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்கு, பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினர் (EWS), குறைந்த வருவாய் பிரிவினர் (LIG), மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் (MIG) ஆகிய குடும்பங்கள்தான். முதல்முறையாக வீடு வாங்க அல்லது கட்ட விரும்பும் இந்தக் குடும்பங்களுக்கு, வட்டிச் சலுகை வடிவில் மிகப் பெரிய நிதி நன்மை வழங்கப்படுகிறது. இதனால், இத்தனை காலமாக வீட்டை ஒரு கனவாகவே வைத்திருந்த பலருக்கும் இப்போது நம்பிக்கை பிறந்துள்ளது.
வட்டி சலுகைகள் :
PMAY-U 2.0 திட்டத்தின் கீழ், மலிவு விலையில் வீடு வாங்குவதற்காகப் பெறப்படும் வீட்டுக்கடன்களுக்கே இந்தச் சலுகை கிடைக்கும்.
கடன் வரம்பு: வீட்டு விலை அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரையிலும், கடன் தொகை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.
வட்டி மானியம்: இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கடனில் முதல் ரூ.8 லட்சம் தொகைக்கு 4% வட்டிச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகை, கடன் காலம் 12 ஆண்டுகளுக்குள் இருந்தால் கிடைக்கும்.
பயன்: இந்த வட்டிச் சலுகை, மாதாந்திர இ.எம்.ஐ. (EMI) தொகையைக் கணிசமாக குறைக்கும் என்பதால், வீடு வாங்குவது மேலும் எளிதாகும். வருமானம் ரூ.9 லட்சம் வரை உள்ள, மற்றும் நாட்டில் எங்கும் சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி பெறக்கூடிய மொத்த வட்டிச் சலுகை ரூ.1.80 லட்சம் வரை இருக்கும். இந்தத் தொகை மத்திய அரசால் நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு 5 தவணைகளில் செலுத்தப்படும். பயனாளிகள் தங்கள் சலுகை நிலையை அதிகாரப்பூர்வ இணையதளம், ஓடிபி (OTP), அல்லது ஸ்மார்ட் கார்டு மூலமாகச் சரிபார்க்க முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
PMAY-U 2.0 திட்டத்திற்காக மத்திய அரசால் மொத்தம் ரூ2.30 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வட்டிச் சலுகைக்கே முக்கியப் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற புதிய குடும்பங்கள் வீடு வாங்கும் கனவை நனவாக்குவார்கள் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மலிவு விலையில் வீடு வாங்க நினைக்கும் குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.



