காலத்துக்கு காலம் உயர்ந்து வரும் அத்தியாவசியச் செலவுகள், எதிர்கால பாதுகாப்பு குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்களால், பொதுமக்கள் மீண்டும் சேமிப்பு பழக்கத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பணியால் வருமானம் ஈட்டத் தொடங்கும் இளம் வயதினரிடமும் சேமிப்பு தொடர்பாக ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல தனியார், அரசுத் துறைகள் கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதில், முன்னணி பொதுத்துறை நிறுவனமான தபால் அலுவலகம் (Post Office) வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
பாதுகாப்பு, நிலையான வருவாய், அரசின் உறுதி போன்ற காரணங்களால், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் நம்பகமானதாக விளங்குகின்றன. சிறிய தொகையிலிருந்து சேமிப்பை தொடங்குவதற்கான வசதி, நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.
அத்தகைய சேமிப்புத் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குவது தான் தபால் அலுவலக RD (Recurring Deposit) திட்டம், தமிழில் தொடர் வைப்புத் திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை சேமித்து வருவதன் மூலம், எதிர்காலத்தில் பெரிய தொகையைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிந்த பிறகு, முதலீடு செய்த முழுத் தொகையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து திருப்பித் தரப்படும். இதற்கிடையே, அவசரத் தேவைகளுக்காக 3 ஆண்டுகள் முடிந்த பின்னர் கூட பணத்தை முன்கூட்டியே எடுக்கும் வசதி இதில் உள்ளது. ஆனால், இவ்வாறு முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற்றால், கிடைக்கும் வட்டியில் சிறிய அளவு குறைப்பு செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதிர்வு காலம் முடிந்த பிறகு விரும்பினால், இந்த RD கணக்கை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கும் வசதியும் தபால் அலுவலகம் வழங்குகிறது. இது சேமிப்பைத் தொடர விரும்புவோருக்கு கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தபால் அலுவலக RD திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் (Quarterly) மதிப்பாய்வு செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, மாதாந்திர சேமிப்பை தவறவிட்டால் கூட வசதியாக ஒரே நேரத்தில் அதிகபட்சம் 6 மாதத் தொகையை டெபாசிட் செய்யும் அனுமதியும் வழங்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு, நிலையான வருமானம் மற்றும் அரசு உத்தரவாதம் ஆகிய காரணங்களால், தபால் அலுவலக RD திட்டம் நீண்டகால சேமிப்புக்கான நம்பகமான தேர்வாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
உதாரணமாக, நீங்கள் தபால் அலுவலக RD திட்டத்தில் மாதம் ரூ.10,000 வீதம் சேமித்து வருகிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். இதன்படி, 5 ஆண்டுகளில் உங்கள் முதலீடு தொகை ரூ.6 லட்சமாக இருக்கும். தற்போதைய 6.7 சதவீத வட்டி விகிதத்தில், இதற்கான வட்டி தொகை சுமார் ரூ.1,13,600 ஆகும். அதனால், 5 ஆண்டுகள் நிறைவில் உங்களுக்கு மொத்தம் ரூ.7,13,600 கிடைக்கும்.
இந்நிலையில், இந்த சேமிப்புத் திட்டத்தை அத்துடன் நிறுத்தாமல், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அப்போது உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருக்கும். வட்டி ரூ.5,08,546. மொத்த தொகை ரூ.17,08,546. இந்த வழியில், பத்து ஆண்டுகளில் ரூ.17 லட்சமாக சம்பாதிக்கலாம். அதுவும் எந்த ஆபத்தும் இல்லாமல். ஒவ்வொரு மாதமும் சிறிது சேமித்து, எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாகக் கூறலாம்.
Read more: தேர்வு கிடையாது.. சொந்த மாவட்டத்தில் அரசு துறையில் வேலை.. ரூ.40,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..



