நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. குறிப்பாக, காய்கறிப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரவேண்டிய வரத்து பெருமளவு குறைந்தது. ஒருபுறம் வரத்துக் குறைவு; மறுபுறம் திருமண முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளுக்கான தேவை சந்தையில் அதிகரித்தது. இந்த வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகிய இரட்டை காரணங்களே இத்தகைய திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
காய்கறிகளின் புதிய விலை நிலவரம் :
தினசரி சமையலில் அத்தியாவசியமாகக் கருதப்படும் காய்கறிகளின் விலை உயர்வு, இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையான வெள்ளைக் கத்தரிக்காய், மேலும் ரூ. 20 உயர்ந்து தற்போது கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான சந்தைகளில் வெள்ளைக் கத்தரிக்காய் தட்டுப்பாடு நிலவுகிறது.
ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை ஒரே நாளில் உயர்ந்து தற்போது ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் விலையும் உயர்ந்து கிலோ ரூ. 80 ஆக விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் தரத்திற்கு ஏற்ப ரூ. 75 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஊட்டி கேரட் விலையும் உயர்ந்து கிலோ ரூ. 60-க்கு விற்பனை ஆனது. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், உருளைக்கிழங்கு விலையில் மாற்றம் இன்றி ரூ.30 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் பீட்ரூட் ஆகியவை கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன. தேங்காய் விலை மட்டும் சற்று குறைந்து ரூ. 65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது நிலவும் விலை உயர்வு காரணமாக, வருகிற பொங்கல் பண்டிகை வரை காய்கறிகளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது, இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read More : குட் நியூஸ்..!! புதிய வாகனத்தை பதிவு செய்ய இனி RTO அலுவலகம் போக வேண்டாம்..!! இன்று முதல் அமல்..!!



