மகாராஷ்டிராவில், திரில்லர் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது காதலனைப் பிரிந்து விடக்கூடாது என்ற பயத்தில், 22 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண், காதலன் ராகுலிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்து விந்து தானம் என்ற பெயரில் விந்தணுவைப் பெற்று, யூடியூப் வீடியோக்களைப் பார்த்துத் தானே கருத்தரித்துக் கொண்ட சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கிராமப்புறத்தைச் சேர்ந்த அனிதா, கல்லூரிப் படிப்புக்காக மும்பை வந்தபோது சக மாணவன் ராகுலுடன் காதல் வயப்பட்டார். படிப்பு முடிந்த பிறகு, இருவரும் தொலைதொடர்பில் இருந்த நிலையில், ராகுலின் வீட்டில் வேறு பெண்ணுடன் திருமணம் பேசத் தொடங்கினர். இதனால், ராகுல் தன்னைப் புறக்கணிக்கத் தொடங்கியதால், ‘எப்படியாவது ராகுலை நிரந்தரமாகத் தன்னுடன் இணைக்க வேண்டும்’ என்று நினைத்த அனிதா, ஒரு விபரீதத் திட்டத்தைத் தீட்டினார்.
ஆன்லைனில் ‘விந்து தானம்’ குறித்த விளம்பரங்களைப் பார்த்த அனிதா, ராகுலிடம், “விந்து தானம் செய்வது உடல்நலத்துக்கு நல்லது” என்று கூறி நம்ப வைத்து, விந்தணுவை ‘தானம்’ செய்ய சம்மதிக்க வைத்தார். ராகுல் சில வாரங்களுக்கு முன்பு விந்தணுவை, அனிதா கொடுத்த முகவரிக்கு அனுப்பியுள்ளார்.
விந்தணு கிடைத்த பிறகு, அனிதா கூகுள் மற்றும் யூடியூபில் ‘ஹோம் இன்செமினேஷன்’ (Home Insemination) குறித்த வீடியோக்களைத் தீவிரமாகப் பார்த்துள்ளார். அதன் அடிப்படையில், சுய இன்பம் மூலம் பெறப்பட்ட அந்த விந்தணுவை சரியான நேரத்தில் தனது உடலில் தானே செலுத்திக் கொண்டு, கர்ப்பமாகியுள்ளார்.
திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அனிதா ராகுலுக்கு தகவல் தெரிவித்தபோது, ராகுல் அதிர்ச்சியடைந்தார். “நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை, வீடியோ காலில் மட்டுமே பேசினோம்” என்று அவர் மறுத்தார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அனிதா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. காவல்துறையினர் அனிதாவின் கூகுள் தேடல் மற்றும் யூடியூப் வரலாற்றைச் சோதித்தபோது, இந்த சுய கருத்தரிப்பு முறை அம்பலமானது.
ஆரம்பத்தில் குழப்பமான பதில்களை அளித்த ராகுல், கிடுக்கிப்பிடி விசாரணையில் விந்து தானம் செய்ததை ஒப்புக்கொண்டார். “அனிதாவைப் பிரியும் எண்ணம் இல்லை என்றாலும், இந்தச் செயல் என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டது” என்று அவர் கூறினார். இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரும் திருமணத்துக்குச் சம்மதித்தனர்.
ஆனால், ராகுலின் உறவினர்கள், “பிறக்கும் குழந்தை யாருடையது என்ற சந்தேகம் எதிர்காலத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக DNA சோதனை செய்ய வேண்டும்” என்று நிபந்தனை விதிக்க, அனிதாவின் குடும்பத்தினர் அதற்குச் சம்மதம் தெரிவித்தனர். “இது காதலின் வெறித்தனமா அல்லது குற்றமா?” என்ற விவாதம் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க, ‘சுய கருத்தரிப்பு முறைகள் பாதுகாப்பானவை அல்ல’ என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.



