கார்த்திகை தீப விழா திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட பின்னர், மாலை வேளையில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிவன் அக்னிப் பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகத்தின் அடிப்படையில் இத்தீபம் மலையின் உச்சியில் ஏற்றப்படுகிறது.
அண்ணாமலை சுமார் 2668 அடி உயரம் கொண்டது. மலையுச்சியில் செம்பு, இரும்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 3000 கிலோவிற்கும் மேற்பட்ட நெய் மற்றும் 1000 மீட்டர் காட்டன் துணி பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரம் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தீப விளக்கு ஏற்றி கார்த்திகை தீப திருநாளை மக்கள் கொண்டாடிகின்றனர்.
வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றி, இருள் விலகி வெளிச்சம் பெருக வேண்டும் என்ற அடையாளத்துடன் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. “வீட்டில் விளக்கேற்றாத கார்த்திகை இல்லை” என்பதே முன்னோர்களின் நெறி. இந்த தினத்தில் விளக்கு ஏற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதை எந்த திசையில் ஏற்றுகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு திசைக்கும் சிறப்பு பலன்கள் உள்ளது.
வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் – திருமணத் தடைகள் அகலும்
கிழக்கு நோக்கி ஏற்றினால் – கஷ்டங்கள் விலகும்
மேற்கு நோக்கி ஏற்றினால் – கடன் தொல்லை குறையும்
தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது என மரபு கூறுகிறது.
துன்பம் என்ற இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் தீபத்தை இந்நாளில் ஏறுங்கள். நீங்கள் நினைத்த செயல்கள் நடக்கும். மேலும், கார்த்திகை தீபத்தன்று குறைந்தது 27 தீபங்களாவது ஏற்ற வேண்டும் என்றும், வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது என்றும் கூறப்படுகிறது.



