பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..
ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார்..
இதனிடையே பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.. பாமகவின் கட்சி நிர்வாகிகள் அன்புமணியை தலைவராக தேர்வு செய்துள்ளனர் என்பதற்கான ஆவணங்கள், தரவுகள் உள்ளன.. எனவே அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
இந்த நிலையில் இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது “பாமக வலுவாக இல்லை.. அதற்கு அன்புமணி தான் காரணம்.. இரட்டை இலக்கத்தில் இருந்த பாமக எம்.எல்.ஏக்கள் தற்போது ஒன்றை இலக்கத்தில் உள்ளது. எனவே அவரை நீக்கிவிட்டோம்.. நீக்கப்பட்ட ஒருவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்” என்று ராமதாஸ் தரப்பு வாதிட்டது..
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு, படிவம் A, B-ல் இரு தரப்பு கையெழுத்திட்டால் அதனை ஏற்கமாட்டோம் என்றும், கட்சியின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும் என்றும் தெரிவித்தது..
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது.. உள்கட்சி விவகாரத்தில் கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.



