சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, “வீட்டை ஒட்டிப் போடாமல், அந்தப் பக்கமுள்ள அரசு நிலத்தில் சேர்த்து சாலை அமைக்கவும்” என்று கேட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான அர்ஜுனன் அங்கு வந்து, மூதாட்டி சரோஜாவை கிராம மக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்துத் தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த சரோஜா, உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. மூதாட்டியை தாக்கிய இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுச் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால், இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மூதாட்டி சரோஜா, தன்னைத் தாக்கியதுடன் தொடர்ந்து ஊர் மக்களை மிரட்டி வரும் அர்ஜுனனை கைது செய்ய வேண்டும் என்று மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மூதாட்டியைத் தாக்கிய அர்ஜுனன், அதிமுகவில் எம்.எல்.ஏ-வாகவும், திமுகவில் எம்.பி-யாகவும், தேமுதிகவில் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர். தற்போது அரசியலில் இருந்து விலகி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது, கொரோனா காலத்தில் ஓமலூர் டோல்கேட் அருகே போலீஸாரைத் தாக்கிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.



