இந்தியாவில் திருமணம் செய்வதற்குரிய சட்டப்பூர்வ வயதை (ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18) இன்னும் எட்டாத நிலையிலும், பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய வயது வந்த இருவரும் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழலாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒருவரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, அவர் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காக மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
கோட்டாவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர், தாங்கள் விருப்பத்துடன் சேர்ந்து வாழ்வதாகவும், இதற்காக அக்டோபர் 27, 2025 அன்று முறையாக லிவ்-இன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், இளம்பெண் குடும்பத்தினர் தங்கள் உறவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இவர்களின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், அந்த இளைஞருக்கு இன்னும் 21 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், லிவ்-இன் உறவுக்கு அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இந்த வாதத்தைப் புறக்கணித்த நீதிபதி அனூப் தாண்ட், தனது தீர்ப்பில், “திருமண வயதை எட்டவில்லை என்பதற்காக, அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்ட வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது” என்று கூறினார்.
மேலும், லிவ்-இன் உறவுகள் இந்தியாவில் குற்றமில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, “ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மாநில அரசுக்கு உள்ள சட்ட கடமையாகும்” என்றும் வலியுறுத்தினார். மேலும், மிரட்டல் உண்மை என்றால், அந்தத் தம்பதிக்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



