வட இந்தியாவில் நிலவும் கடுமையான பனிமூட்டம் மீண்டும் ஒரு கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிகாலை ஏற்பட்ட தொடர் விபத்தில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில், மதுராவில் உள்ள பல்தேவ் காவல் நிலையப் பகுதிக்கு அருகில், மைல்கல் 127 என்ற இடத்தில் நடந்துள்ளது. அடர்ந்த பனிமூட்டத்தால் சாலை முழுவதும் பார்வைத்திறன் மிகவும் குறைந்திருந்த நிலையில், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்தத் தொடர் விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்தவுடன் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், 3 முதல் 4 பேருந்துகள் தீப்பிடித்ததாகவும், அந்தப் பேருந்துகள் அனைத்தும் பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் தெரிவித்தார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறை, தீயணைப்புத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியிலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாகச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
Read More : உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி? இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்..!! சிம்பு கொடுத்த டிப்ஸ்..!!



