பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமும் சேர்த்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.,1000 ரொக்கமாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் இடம்பெறாதது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பல எதிர்க்கட்சிகளும் ரொக்கம் வழங்க வலியுறுத்தின.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் திருநாளை சிறப்பாக மக்கள் கொண்டாட மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையினை 10ஆம் தேதியே ஒரு கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.