தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்போது விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இனி அரசின் இணையதளம் மூலம் எளிதாக ஆன்லைனில் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அரசு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. ஏற்கனவே 1.13 கோடிப் பெண்கள் பயனாளிகளாக இருந்த நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் இருந்து மேலும் 17 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம், தற்போது இத்திட்டத்தில் மொத்தம் 1,30,69,831 பெண்கள் பயனாளிகளாக உயர்ந்துள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
உங்கள் பகுதியில் உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மூலம் இரண்டாம் கட்டமாக உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பலர், இன்னும் ரூ.1000 பெறாத நிலையில் இருக்கலாம். அப்படி பணம் வராதவர்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டவையாகவே உள்ளன. ஆனால், நிராகரிப்பு குறித்த முறையான தகவல் (எஸ்எம்எஸ்) பல பெண்களுக்கு இன்னும் சென்று சேராததால், தங்கள் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில்தான் இருப்பதாக அவர்கள் கருதிக்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் சிலர் நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடி தகவல் சென்றடையவில்லை.
ஆன்லைனில் முறையீடு செய்வது எப்படி..?
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கவலைப்பட தேவையில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://kmut.tnega.org/kmut-grievance/ என்ற பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
யார் முறையிட முடியும்..?
‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மூலம் இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த மேல்முறையீட்டைச் செய்ய முடியும்.
முறையீடு செய்யும்போது, இரண்டு வகையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தேன், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது’ என்ற வாய்ப்பு. ‘எஸ்எம்எஸ் வந்தது ஆனால் பணம் வரவில்லை’ என்ற வாய்ப்பு.
இதில், உங்கள் நிலைமைக்கு ஏற்ற வாய்ப்பைத் தேர்வு செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் முறையீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : FLASH | புஸ்ஸி ஆனந்த் முன்னே அடித்துக் கொண்ட தவெக தொண்டர்கள்..!! அதிர்ச்சியில் விஜய்..!! பெரும் பரபரப்பு..!!



