பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவின் சில அமைச்சர்கள் அவதூறு கருத்துகள் தெரிவித்திருந்த நிலையில், EaseMyTrip இந்தியா அனைத்து மாலத்தீவு விமான முன்பதிவுகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான EaseMyTrip-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, தனது எக்ஸ் தளத்தில், “எங்கள் தேசத்துடன் ஆதரவாக ஒற்றுமையாக துணை நிற்கிறோம். EaseMyTrip அனைத்து மாலத்தீவு விமான முன்பதிவுகளையும் இடைநீக்கம் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட EaseMyTrip நிறுவனம், 2008இல் நிஷாந்த் பிட்டி, ரிகாந்த் பிட்டி மற்றும் பிரசாந்த் பிட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது.
முன்னதாக ஜனவரி 4 அன்று பிரசாந்த் பிட்டி தனது பதிவில், “லட்சத்தீவின் நீர் மற்றும் கடற்கரைகள் மாலத்தீவுகள்/சீஷெல்ஸ் போன்ற இடங்களுக்கு நிகராக சிறந்த இடங்கள். EaseMyTrip இல் நாங்கள் நமது பிரதமர் மோடி சமீபத்தில் பார்வையிட்ட இந்த அழகிய இடத்தை விளம்பரப்படுத்த அற்புதமான சிறப்பு சலுகைகளை வழங்குவோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான சலசலப்புக்கு மத்தியில், #BoycottMaldives என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது, பல இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மாலத்தீவு அரசியல்வாதிகள் தொடங்கிய சர்ச்சை
பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலத்தீவு அரசாங்கத்திடம் இந்தியா இந்த விஷயம் தொடர்பாக கவலை தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 அமைச்சர்களைத் தவிர, மற்ற மாலத்தீவு அதிகாரிகளும், எம்.பி. ஜாஹித் ரமீஸ் உட்பட, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த சர்ச்சை வெடித்தது.