விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது விபத்தா அல்லது கொலையா எனத் தீவிர விசாரணை நடத்திய கிளியனூர் போலீசாருக்கு, ஒரு பழைய காதலில் தொடங்கி கொலையில் முடிந்த திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன.
விசாரணையில், சடலமாக கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி கணவர்களைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது திருமணங்களுக்கு முன்பே தான் காதலித்த கண்ணன் (52) என்பவருடன் மகேஸ்வரிக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் லாரி டிரைவராகப் பணியாற்றும் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகள்கள் இருந்தும், மகேஸ்வரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மகேஸ்வரி பணத்திற்காக பல ஆண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது கண்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மகேஸ்வரியைச் செங்கல்பட்டு அருகே லாரியில் அழைத்துச் சென்ற கண்ணன், அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், மது போதையில் இருந்த கண்ணன் மகேஸ்வரியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரி லாரிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகேஸ்வரி உயிரிழந்ததை உறுதி செய்த கண்ணன், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கம்மல்களைக் கழற்றிக்கொண்டார். பின்னர், அந்த உடலைத் திண்டிவனம் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டுத் தப்பியோடினார். தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், வானூர் அருகே தலைமறைவாக இருந்த கண்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு பெண்ணைக் கொன்று, நகைகளைப் பறித்துவிட்டு உடலைச் சாலையில் வீசிச் சென்ற இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



