மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலரை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு அவரது குடும்பத்தினரே உருவ பொம்மை வைத்து இறுதிச் சடங்கு நடத்திய வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
விதிஷா பகுதியைச் சேர்ந்த 23 வயதான கவிதா என்ற இளம்பெண், சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கவிதா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
மகள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக எடுத்த இந்த முடிவை ஏற்க முடியாத குடும்பத்தினர், “எங்கள் மகள் எங்களுக்கு இறந்துவிட்டாள்” எனப் பொதுவெளியில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிவு செய்தனர். மாவினால் கவிதாவின் உருவத்தைப் போன்ற ஒரு பொம்மையைச் செய்து, அதனைப் பாடையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். மயானத்தை அடைந்ததும், ஒரு மனிதருக்குச் செய்யப்படும் அனைத்து விதமான பாரம்பரிய சடங்குகளையும் முறைப்படி செய்த குடும்பத்தினர், இறுதியில் அந்த உருவ பொம்மைக்குத் தீ மூட்டித் தகனம் செய்தனர்.
இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் குறித்துப் பேசிய கவிதாவின் தந்தை ராம் பாபு, “மகள் எடுத்த இந்த முடிவால் எங்கள் குடும்பத்தின் கௌரவம் குலைந்துவிட்டது. இது என் வாழ்நாளின் மிகவும் வேதனையான தருணம்” என துயரத்துடன் தெரிவித்தார். உயிரோடு இருக்கும் மகளுக்கு அவரது குடும்பத்தினரே ஈமச்சடங்குகள் செய்த இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



