விஜய்க்கு எதிராக பாஜகவினர் யாரும் பேசக்கூடாது என்று பியூஷ் கோயல் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன.. அந்த வகையில் நேற்று அதிமுக – பாஜக இடையே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்..
பாஜக பொறுத்தவரை 50 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் கடந்த முறை போலவே 20 தொகுதிகள் என அதிமுக பேரத்தை தொடங்கி உள்ளது.. குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கலாம் என்று அதிமுக தரப்பு கூறியதாக தெரிகிறது..
மேலும் அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ இணைக்க பாஜக தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. டிடிவி, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கான இடங்களை பாஜக ஒதுக்கும் எனவும் கூறப்படுகிறது.. என்.டி.ஏ கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ள இபிஎஸ் ஓ.கே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
எனினும் ஓபிஎஸ், டிடிவி, பாஜக என மூன்று தரப்புக்கும் மொத்தமாக சீட் ஒதுக்கப்பட உள்ளதாம்.. பாஜக அதிலிருந்து ஓபிஎஸ், டிடிவிக்கு இடங்களை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.. அதன்படி ஓபிஎஸ்-க்கு 3 சீட்களும், டிடிவி தினகரனுக்கு 6 சீட்களும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.. எனினும் இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் விஜய்க்கு எதிராக பாஜகவினர் யாரும் பேசக்கூடாது என்று பியூஷ் கோயல் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும், ” திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார்.
விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றாலும், கட்சி பொதுக்கூட்டங்களிலோ, சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்” என்று பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளாராம்..



