குதிரை வண்டிகளே உயிர்நாடி..!! 125 ஆண்டுகளாக கார்களுக்கு தடை..!! நவீன இயந்திர உலகை புறக்கணித்த மெகினாக் தீவு..!!

Island 2025

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான கார் தொழிற்சாலைகளும், எந்திரமயமான டெட்ராய்ட் நகரமும்தான். ஆனால், அதே மாநிலத்தில் நவீன உலகின் இரைச்சல்களுக்கு மத்தியில், கார்களே இல்லாத ஒரு அமைதியான சொர்க்கம் இருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஹுரான் ஏரியின் (Lake Huron) இதயமாக திகழும் மெகினாக் தீவு (Mackinac Island), காலச்சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி, 19-ஆம் நூற்றாண்டின் அமைதியை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறது.


சுமார் 3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில், எந்திரங்களின் இரைச்சலுக்குப் பதிலாக குதிரை லாடங்களின் சத்தமும், மிதிவண்டி மணிகளின் ஓசையும்தான் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சுமார் 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்தத் தீவில், கார்களுக்குத் தடை விதிக்கப்பட்ட வரலாறு மிகவும் சுவாரசியமானது. 1898-ஆம் ஆண்டு இங்கு முதன்முதலில் ஒரு கார் கொண்டு வரப்பட்டபோது, அதன் எந்திர சத்தம் அங்கிருந்த குதிரைகளை மிரளச் செய்ததாம். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தீவு நிர்வாகம் கார்களுக்கு முழுமையாக தடை விதித்தது. அன்று தற்காலிகமாக எடுக்கப்பட்ட அந்த முடிவு, இன்று அந்தத் தீவின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது.

இன்று வரை மெகினாக் தீவில் குப்பை சேகரிப்பது முதல் அவசர தேவைகளுக்கான சரக்குப் போக்குவரத்து வரை அனைத்தும் குதிரை வண்டிகள் மூலமே நடைபெறுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இத்தீவின் அழகை ரசிக்க வேண்டுமானால், ஒன்று நடைப்பயணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்த வேண்டும். எந்திரங்களின் புகை இல்லாததால் இங்குக் காற்று மிகவும் தூய்மையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், நிலப்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான குதிரைகள் பிரத்யேகப் படகுகள் மூலம் இந்தத் தீவிற்கு அழைத்து வரப்படுவது ஒரு கண்கொள்ளா காட்சியாகும்.

இயற்கை எழில் மட்டுமல்லாது, மெகினாக் தீவு ஆழ்ந்த வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதி பழங்குடியினரின் புனித தலமாகவும், அவர்களின் ஆன்மீக மையமாகவும் இருந்துள்ளது. இங்குள்ள பழமையான பழங்குடியின இடுகாடுகள் இதற்குச் சான்றாக உள்ளன. மேலும், 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கம்பீரமான கோட்டை மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற ‘கிராண்ட் ஹோட்டல்’ ஆகியவை இந்தத் தீவின் வரலாற்றுப் பெருமையை இன்றும் பறைசாற்றுகின்றன.

இங்கு வரும் பயணிகள் வசந்த காலத்தில் நடைபெறும் ‘லைலாக்’ (Lilac) மலர் திருவிழாவை காண தவறுவதில்லை. தீவின் பெரும்பகுதி மாநிலப் பூங்காவாக பராமரிக்கப்படுவதால், அடர்ந்த காடுகளும், நீல நிற ஏரி நீரும் ஒரு ஓவியம் போலக் காட்சியளிக்கின்றன. நவீன எந்திர உலகத்திலிருந்து முற்றிலுமாக தன்னை விடுவித்துக் கொண்டு, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வை இன்றும் மனிதர்களால் வாழ முடியும் என்பதற்கு மெகினாக் தீவு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.

Read More : பெண்களே..!! தொழில் தொடங்க விருப்பமா..? தமிழ்நாடு அரசு கொடுத்த செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை.. நெல்லையை உலுக்கிய சம்பவம்.. 7 மாதங்களில் தீர்ப்பு!

Thu Dec 25 , 2025
Father sentenced to death for impregnating daughter.. Paddy-shaking incident.. Verdict in 7 months!
Rape 2025 4

You May Like