உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி அஹானா, துரித உணவின் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை உணவுகளை தொடர்ந்து அதிகமாக உட்கொண்டதால், அஹானாவின் உடல் எடை 70 கிலோ வரை உயர்ந்தது. இதனால், அவரது குடல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மொராதாபாத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 20 நாட்கள் கழித்து மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
நகரங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் திறக்கப்படும் துரித உணவு கடைகள், இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. பர்கர்கள், மோமோக்கள், பிரெஞ்ச் பொரியல், சமோசா, பீட்சா, கூல் டிரிங்க்ஸ் போன்றவை மாணவர்களை எளிதில் ஈர்க்கின்றன. விதிகளுக்கு மாறாக, பள்ளி கேன்டீன்களிலும் இவ்வகை குப்பை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பெற்றோர் வீட்டிலிருந்து சத்தான உணவு அனுப்பினாலும், மலிவு, சுவை மற்றும் எளிதில் கிடைப்பது காரணமாக, குழந்தைகள் குப்பை உணவுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இருதயநோய் நிபுணர் டாக்டர் அனுராக் மெஹ்ரோத்ரா கூறுகையில், “குப்பை உணவு இரத்தத்தில் கொழுப்பை அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை பல மடங்கு உயர்த்துகிறது. ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகள், இதய தசைகளை மெதுவாக பலவீனப்படுத்துகின்றன.” என்றார்.
உணவியல் நிபுணர் டாக்டர் அமிஷா சிங் கூறுகையில், மைதா, தரம் குறைந்த காய்கறிகள் மற்றும் வினிகர் உட்கொள்வது கல்லீரல் மற்றும் குடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. குப்பை உணவில் ‘நார்ச்சத்து’ இல்லை. சமோசாக்களுக்கு ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது அதை ‘மெதுவான விஷமாக’ மாற்றுகிறது என்றார்.
Read more: ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் கான்ஸ்டபிள் வேலை.. ரூ.69,100 வரை சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..



