நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார் என ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் பாபுலால் கார்டி, “பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றார். உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.