2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க நாடு முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில், ஆன்லைன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோக துறையில் பெரும் முடக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), ஜெப்டோ (Zepto) மற்றும் பிளிங்கிட் (Blinkit) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்காக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தை எதிர்நோக்கியிருக்கும் நிறுவனங்களிடையே இந்த அறிவிப்பு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ‘கிக் எகானமி’ (Gig Economy) எனப்படும் செயலி சார்ந்த தொழிலாளர் முறை அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் (TGPWU) மற்றும் இந்திய செயலி சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IFAT) ஆகியவை ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள டெலிவரி ஊழியர்கள் இதில் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது மிக முக்கியமான புத்தாண்டு தினத்தில் தங்களது கோரிக்கைகளை உரக்க சொல்ல இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெலிவரி ஊழியர்களின் புகார்கள் மிகவும் நியாயமானவையாகவும், அதே சமயம் மனிதாபிமான அடிப்படையிலும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. விரைவான டெலிவரி என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாகனங்களை ஓட்ட வேண்டிய கட்டாயம், காரணமின்றி திடீரென ஐடி (ID) முடக்கப்படுதல் மற்றும் பண்டிகை காலங்களில் வழங்கப்படும் மிகக்குறைந்த ஊக்கத்தொகை போன்றவை இவர்களைப் போராட்டக்களத்திற்குத் தள்ளியுள்ளன.
குறிப்பாக, விபத்து காப்பீடு, முறையான ஓய்வு நேரம், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் வருமான இழப்பைத் தவிர்த்தல் மற்றும் பணியிடத்தில் கண்ணியமான முறையில் நடத்தப்படுவது உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதை கட்டுப்படுத்தி, டெலிவரி ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
உணவகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில், இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றால் அது புத்தாண்டு கொண்டாட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உழைப்பவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுமா அல்லது வாடிக்கையாளர்களின் கொண்டாட்டம் தடையின்றி நடக்குமா என்பது அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையிலேயே உள்ளது.



