துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள யலோவா (Yalova) என்ற நகரில், ஐஎஸ் (IS) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பெரும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. சுமார் 8 மணி நேரம் மிக உக்கிரமாக நீடித்த இந்தப் போரில், 3 துருக்கிய போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான பதிலடி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இஸ்தான்புல் நகருக்கு அருகிலுள்ள இந்தத் துறைமுக நகரில், திங்கட்கிழமை அதிகாலை முதல் காவல்துறையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட போது, அவர்கள் சரணடைய மறுத்துப் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் மற்றும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் பலத்த காயமடைந்தனர். இறுதியில் அந்த வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் முழுமையாக ஒழித்துக் கட்டினர். மனிதாபிமான அடிப்படையில், அந்த வீட்டிற்குள் சிக்கியிருந்த 5 பெண்கள் மற்றும் 6 குழந்தைகளைத் துருக்கியப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, துருக்கியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகப் பெரிய அளவில் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்த இந்தத் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் அம்பலமானது. இதைக் கண்டறிந்த உளவுத்துறை, நாடு முழுவதும் உள்ள 15 மாகாணங்களில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகளை நடத்தியது.
உலக அளவில் மீண்டும் தலைதூக்க முயன்று வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கத் துருக்கி அரசு தற்போது தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் துருக்கி நாட்டுப் பிரஜைகளே என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக நைஜீரியா, சிரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், சர்வதேச அளவில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
Read More : வைகுண்ட ஏகாதசி..!! சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்..? பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!



