புத்தாண்டை முன்னிட்டு கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஷாக் கொடுத்துள்ளன. வாகன உற்பத்தி செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாலும், வாகன நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிக்க தயாராகி வருகின்றன. இதனால், வரும் மாதங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ரூபாய் மதிப்பு குறையும் நேரங்களில் வாகன விலைகளை உயர்த்துவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால் இந்த முறை, ரூபாய் சரிவுடன் சேர்ந்து, உலோகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விளக்குகின்றன. இதன் காரணமாக விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வாகனத் துறை தற்போது மீண்டும் விலை உயர்வு பாதையில் பயணிக்கிறது. ஸ்டீல், அலுமினியம், எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் நிறுவனங்களின் செலவுகளை மேலும் அதிகரித்துள்ளன. இருப்பினும், வாகன விலைகள் உயர்ந்தாலும், வாடிக்கையாளர்களின் தேவை குறைய வாய்ப்பில்லை எனத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வாகன விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2026 பிப்ரவரி மாதத்தில் கார்களின் விலையை உயர்த்தலாம் எனத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக, பயணிகள் வாகன சந்தையில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ள மாருதி சுஸுகி (40%) மற்றும் ஹூண்டாய் இந்தியா (14%) ஆகிய நிறுவனங்கள் இதுவரை விலை உயர்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சொகுசு வாகனப் பிரிவில், விலை உயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. ஜனவரி 1 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இதேபோல், எம்ஜி மோட்டார் நிறுவனமும் 2 சதவீதம் வரை விலை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் தொடர்பாக, பெட்ரோல் இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் முக்கிய நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
VAHAN பதிவுத் தரவுகளின்படி, பயணிகள் வாகனப் பிரிவு இதுவரை 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், இருசக்கர வாகனப் பிரிவு 4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நான்கு சக்கர வாகனப் பதிவுகள் 15 சதவீதமும், இருசக்கர வாகனப் பதிவுகள் 18 சதவீதமும் அதிகரித்துள்ளன.
டிசம்பர் மாத வளர்ச்சி தொடர்ந்தால், 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இருசக்கர வாகனப் பிரிவு 8 சதவீத வளர்ச்சியையும், நான்கு சக்கர வாகனப் பிரிவு -3 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், எலாரா செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2026 நிதியாண்டில் இருசக்கர வாகன வளர்ச்சி 9 சதவீதமாகவும், நான்கு சக்கர வாகன வளர்ச்சி 5.5 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளது.
Read more: வைகுண்ட ஏகாதசி..!! சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்..? பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!



