இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக உயரிய ஆளுமையுமான நல்லகண்ணு, மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் தவறி விழுந்த அவருக்கு, அடுத்தடுத்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் பாதிப்புகளால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஒன்றரை மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நிலை நலிவடைந்துள்ளதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 28-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போதைய நிலவரப்படி, அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால், நோய்த்தொற்று அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நல்லகண்ணுவை சந்திக்கத் தொண்டர்களோ அல்லது அரசியல் பிரமுகர்களோ நேரில் வர வேண்டாம் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்களின் தீவிர ஆலோசனையின்படி, ஓய்வு மற்றும் தடையற்ற சிகிச்சை மிக அவசியம் என்பதால், அவரை யாரும் நேரில் பார்க்க அனுமதி இல்லை என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராகி வருவதாகவும், இருப்பினும் முழுமையான ஓய்வு தேவைப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : இனிப்புகளில் துணிகளுக்குப் போடும் சாயம் கலப்பு..!! மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும்..!! மருத்துவ உலகமே ஷாக்..!!



