தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாகப் பயணித்து வரும் நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஒருபுறம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் விஜய் மும்முரம் காட்டி வரும் வேளையில், அவர் மீதான விமர்சனங்களும் அரசியல் தளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான், விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். விஜய்யை ஒரு சிறந்த நடிகராக மக்கள் நேசிப்பதாக குறிப்பிட்ட அவர், அரசியலைப் பொறுத்தவரை விஜய் இன்னும் களப்போராட்டங்களில் இறங்கவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.
மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொடக்கத்தில் விஜய்யின் அரசியல் வரவை நானும் ஆதரித்தேன். ஆனால், அவர் யாருடைய தூண்டுதலின் பேரில் களமிறக்கப்பட்டார் என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்து வீதியில் இறங்கியிருந்தால், ஒட்டுமொத்தத் தமிழகமும் அவர் பக்கம் நின்றிருக்கும்.
அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞர் என்பதால், மக்கள் இப்போதும் அவரை ஒரு நடிகராகவே பார்க்க விரும்புகிறார்கள். ‘ஜனநாயகன்’ அவரது கடைசிப் படம் என்பதால் அவர் மீதுள்ள அன்பினால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். அவர் அரசியலுக்கு வருவதையோ, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதையோ நான் எதிர்க்கவில்லை. ஆனால், மக்களுக்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.



