நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் கைகளில் புத்தகம் ஏந்த வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பாஜக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நீதி நிர்வாகம் ஆகிய இரண்டுமே சீர்குலைந்துள்ளதாக சாடிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததை விமர்சித்தார். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திமுக அரசு, தனியாரிடம் கடன் வாங்கியாவது மக்களுக்குப் பொங்கல் பணத்தை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் குறித்து தெரிவித்த அவர், வரும் 4-ஆம் தேதி திருச்சி வரும் அமித்ஷா, புதுக்கோட்டையில் நடைபெறும் அரசியல் நிகழ்வில் பங்கேற்பார் என்றும், 5-ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார் என்றும் கூறினார்.
அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் இருப்பினும், இது அந்தப் பேரியக்கத்தின் உள் விவகாரம் என்பதால் இறுதி முடிவை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.



