உலகளாவிய சுற்றுலாத் தலமான இந்தோனேசியா, சமீபத்தில் ஒரு புதிய சட்டத்தின் காரணமாக பேசுபொருளாகியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் பல தசாப்தங்களாக நீடித்து வந்த டச்சு காலனித்துவ காலச் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய உள்நாட்டுத் தண்டனைச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் தொடர்பான முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது.
புதிய தண்டனைச் சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும். மேலும், திருமணம் செய்யாமல் தம்பதிகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது பெரும் அபராதம் விதிக்கப்படலாம். இந்தோனேசியாவில் இதுவரை திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுக்கு சட்டப்பூர்வத் தடை இல்லாத நிலையில், இந்த மாற்றம் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த சட்டத்தில் ஒரு முக்கிய வரம்பும் உள்ளது. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்டவரின் மனைவி, பெற்றோர் அல்லது குழந்தைகள் புகார் அளித்தால் மட்டுமே காவல்துறை வழக்குப் பதிவு செய்யும். மூன்றாம் தரப்பினர் அல்லது அண்டை வீட்டாரின் புகார்களை அதிகாரிகள் ஏற்க மாட்டார்கள். சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் சட்டம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த புதிய விதிகள் இந்தோனேசிய குடிமக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பாலி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வெளிநாட்டினர் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது. ஹோட்டல் துறை மற்றும் பயணத் தொழில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சட்டம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கும் என்று வணிகக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
புதிய தண்டனை சட்டம், உடலுறவு மட்டுமின்றி, ஜனாதிபதியை விமர்சிப்பது, அரசாங்க நிறுவனங்களை அவமதிப்பது மற்றும் தேசிய சித்தாந்தத்திற்கு எதிராக பேசுவது போன்றவற்றையும் குற்றமாக கருதுகிறது.. மனித உரிமை அமைப்புகள் இதை குடிமைச் சுதந்திரங்கள் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளன.
இதேபோன்ற ஒரு சட்டம் 2019-ஆம் ஆண்டில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடித்தன. அப்போது பின்வாங்கிய அரசாங்கம், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு சில மாற்றங்களுடன் இந்தச் சட்டத்தை தற்போது அமல்படுத்தியுள்ளது.
Read More : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இல்லம் மீது திடீர் தாக்குதல் ; ஒருவர் கைது..!



