மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 26 வயதான வாலிபர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். பின்னர், சிறுமியை கண்டுபிடித்ததுடன், அவரை அழைத்துச் சென்ற காதலனையும் கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது அந்த சிறுமி கூறுகையில், “விரும்பிதான் வீட்டை விட்டு வெளியேறினேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன்” என கூறினார். இந்நிலையில், காதலன் ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிலா ஜோஷி பால்கே, ”சிறுமி மைனர். ஆனால், விருப்பப்பட்டு தான் வீட்டை விட்டு, காதலனுடன் தங்கியதாக போலீசிடம் கூறியுள்ளார். பாலியல் உறவு சம்பவம் இரண்டு பேருக்கு இடையேயான ஈர்ப்பினால் ஏற்பட்டதாக தெரிகிறது. காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை. இதனால் சிறுமியின் காதலனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார்.