உடலில் உள்ள செல்கள் வழக்கத்திற்கு மாறாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து, மற்ற பாகங்களுக்கும் பரவுவதையே புற்றுநோய் என்கிறோம். நவீன மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற அடிப்படையில் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. குறிப்பாக, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுமுறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
நமது சமையலறையில் நாம் செய்யும் சில தவறுகள் புற்றுநோய்க்கு நுழைவுச்சீட்டாக மாறுகின்றன. குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவது பெரும் ஆபத்தானது. இவ்வாறு செய்வதால் எண்ணெய்யில் உள்ள மூலக்கூறுகள் சிதைந்து, டிஎன்ஏ-வை (DNA) பாதிக்கக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட சேர்மங்களை உருவாக்குகின்றன. இது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதற்குத் துணைபுரிகிறது.
அதேபோல், தீயில் நேரடியாக வாட்டி சமைக்கப்படும் ‘கிரில்’ (Grill) வகை உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, பெருங்குடல் மற்றும் கணைய புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. இறைச்சி அதிக வெப்பத்தில் வேகும்போது உருவாகும் HCAs மற்றும் PAHs போன்ற வேதிப்பொருட்கள் புற்றுநோயைத் தூண்டக்கூடியவை.
உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது குடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைக்கின்றன. சாசேஜ்கள், பேக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், மனித உடலுக்குள் செல்லும்போது புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக மாறுகின்றன.
இவற்றுடன், பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவுகளை சேமித்து வைக்கும் பழக்கமும் தவிர்க்கப்பட வேண்டும். பிளாஸ்டிக்கில் உள்ள பிபிஏ (BPA) மற்றும் தாலேட்ஸ் போன்ற நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து, ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதோடு நீண்ட காலத்தில் ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களுக்கும் வழிவகுக்கின்றன.



