மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விபத்துகளை குறைக்கும் புரட்சிகர நடவடிக்கையாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் (Vehicle-to-Vehicle – V2V) தொழில்நுட்பத்தை விரைவில் அமல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.
V2V தொழில்நுட்பம் என்றால் என்ன?
இந்த முறையில், அருகில் செல்லும் வாகனங்களின் வேகம், இருப்பிடம், திடீர் வேக மாற்றம், திடீர் பிரேக், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் உள்ள வாகனங்கள் போன்ற தகவல்கள் நேரடியாக மற்ற வாகனங்களுக்கு ஒலியில்லா எச்சரிக்கைகளாக அனுப்பப்படும். இதனால் ஓட்டுநர்கள் உடனடி முன்னெச்சரிக்கை எடுத்து விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தொலைத்தொடர்பு துறை (DoT) உடன் இணைந்து ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. V2V பயன்பாட்டிற்காக 5.875–5.905 GHz வரம்பில் 30 MHz ஸ்பெக்ட்ரம் வழங்க தொலைத்தொடர்பு துறை கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. “இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கார்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக பேசிக்கொள்ள முடியும்” என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
விபத்து மரணங்களை குறைக்கும் முயற்சி
இந்த V2V தொழில்நுட்பம், சாலை விபத்து மரணங்களை குறைக்கும் அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன.. இதில் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.. உயிரிழப்புகளில் 66% பேர் 18–34 வயதினர்கள் என அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை கட்கரி குறிப்பிட்டார்.
மோட்டார் வாகனச் சட்டத்தில் 61 திருத்தங்கள்
இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்க, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மோட்டார் வாகனச் சட்டத்தில் 61 திருத்தங்கள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் நோக்கம், சாலை பாதுகாப்பை உயர்த்துதல், தொழில் செய்ய எளிமை, பொதுமக்களுக்கு சேவைகளை மேம்படுத்துதல், உலக தரநிலைகளுடன் இந்திய சட்டங்களை இணைத்தல் ஆகியவை ஆகும்..
பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் புதிய வசதிகள்
உயர்நிலை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
பேருந்துகள், ஸ்லீப்பர் கோச்சுகள், பயணியர் வாகனங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு விதிகள், பேருந்து உடல் அமைப்பு குறியீடு நடைமுறை, பாரத் என்.சி.ஏபி Bharat NCAP (BNCAP) பாதுகாப்பு மதிப்பீடு கட்டங்களாக ADAS (Advanced Driver Assistance Systems) அறிமுகம், போக்குவரத்து விதிமீறல்களுக்கு பாயிண்ட் அடிப்படையிலான கண்காணிப்பு முறை, சரக்கு வாகன அனுமதிகளுக்கான டிஜிட்டல் தானியங்கி முறை
V2V தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால், இந்திய சாலைகளில் விபத்துகளை பெரிதும் குறைக்கும் ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும் என அரசு நம்புகிறது.
Read More : வெறும் 4 நாட்களில் ரூ. 1.65 லட்சம் கோடியை இழந்த முகேஷ் அம்பானி..! என்ன காரணம் தெரியுமா?



